Monday, November 9, 2009

கொஞ்ச நாள் பொறு தலைவா..

'
'



பதிவுலகத்திற்கு இன்றிலிருந்து விடுப்பு..

.

Thursday, October 29, 2009

உள்ளுரசும் நினைவு

தேயத் தேய நடந்தாலும்
தேய்ந்த பின்னும்
மிஞ்சுகிறது..
உன் நினைவு போல
பாத ரேகை..

************"************"************"*************"*****

பெஷாவரில் குண்டுவெடிப்பு..
ஆள் தோட்ட பூபதி நானடா..
மானாட..
மச்சி சொல்லு மயிலாட..
ஆணியே புடுங்க வேணா..
முதலையின் முதுகில் ட்ரான்ஸ்மிட்டர்..
நறுக்கிய வெங்காயம் ஒரு கப்..
எத்தனை தாவினாலும்

வெயில் நேர மின்விசிறியால்
விரட்ட முடியாத
வியர்வை பிசுபிசுப்பாய்
உன் நினைவு..

************"************"************"*************"*****

உன்னிடம் பேச நினைத்த
பேச்சுக்களெல்லாம்
உள் நாக்கில்
தூக்கு போட்டு
தொங்கிக் கொண்டிருக்கிறதே..
எப்போது துப்புவது?
எப்படி துப்புவது?

************"************"************"*************"*****

காய இருந்த துணி
ஆற்று மண்ணில் விழுந்தால்
உதறி காய வைக்கலாம்
கரிசல் மண்ணில் விழுந்தால்
அலசி காய வைக்கலாம்

கன்னி மனதில் விழுந்தால்
கறையோடு தான்
கட்டிக் கொள்ள வேணும்

************"************"************"*************"*****

நண்பன் சொன்னான்
உன்னை பிரிந்த பின்புதான்
என் முகம் பொலிவிழந்ததாய்..
அவனுக்குத் தெரியாது
உன் நிழலை
நான் சுமப்பது..

.

Monday, October 19, 2009

ஒரு காத்திருத்தலின் போது..

பழ கடைக்காரரின்
ஆர்வப்பார்வை
உதறி திரும்பினேன்..

வலப்பக்கம்
மகளுக்கு
மானாவாரியாய்
ஆலோசனைகளை
வழங்கும் வயதான தாய்..

இடப்பக்கம்
இந்திய ஜனநாயகத்தை
சரிபார்த்துக் கொண்டு
இருவர்..

இவர்களையெல்லாம்
சரி பார்த்துக்கொண்டு
நான் ?

பேருந்தின்
பேரிரைச்சலுக்கு
பின் கேட்டது
சிறகு விரித்த
சிரிப்புகள் சில..

பேருந்து நிறுத்தத்தில்
மண்பானைத் தண்ணீரா
தாகத்திற்கு பருகினேன்..

ஐந்து பறவைகளில்
அவளொரு ஆச்சரியம்
ஒவ்வொரு நொடியும்
உயரும் அழகு..

சிந்தனையின்
சிறகு பறித்து
கற்பனைக்கு
கடன் தந்தாள்..

சில நொடியில்
விழி சுழற்றி
வழி மறித்தாள்
அவள்
விழிவழி
கொஞ்சம் உலகம்
பார்த்தேன்..

இப்போதும்
பேருந்து வந்தது
ஆனால்
தென்றாலாய் நகர்ந்தது..

இப்போது நிறுத்தத்தில்
நான்
காலி மண்பானை
பழக் கடைக்காரரின்
பரிகாசப் பார்வை..

-- 06/04/2000
(பழைய டைரியின் பரிகாசம்)


.

Thursday, October 15, 2009

பிள்ளைச் சூடு

பக்கத்தில்
தடவிக்கொண்டிருக்கிறேன்
சந்தேகமில்லை..
இது என் பிள்ளைச் சூடுதான்
காய்ந்து போன கைவிரல்களில் பரவி
நெஞ்செல்லாம் நிறைந்தது..

அந்த கடைசிப்பகலில்
தடவிக்கொண்டிருந்த பிள்ளையை
செல்லடிக்கும் சத்தம் கேட்டதும்
அம்மா தூக்கிக்கொள்ள..
கண்ணி வெடியால் முடமாகி
மூன்று நாளாய் முனங்கும்
சின்னையனை நான் முதுகில்
தூக்கியும் இழுத்தும் கொண்டு..

அந்த கலைந்த வரிசையில்
கோர்த்துக் கொண்டோம்..
சின்னையனின் முனங்கலோடு
அம்மாவின் குரலும் கேட்டது
பிள்ளை மயங்கிருச்சு
வார்த்தைகளும் வாக்கியங்களும்
குழப்பமாய் எனக்குள் சிக்கிக்கொள்ள
யாரோ சொன்னர்கள்
அந்த ஆர்மிக்காரன்கிட்ட
பிள்ளைக்கு கொஞ்சம் தண்ணி கேளு
அம்மா இடுப்பாலே நகர்ந்தாள்..

சில நிமிசத்தில்
பெரிய சத்தம் நிறைய கரும்புகை
நினைவு வந்ததால் தேடினேன்..
அம்மாவும் பிள்ளையும் எங்கே?
சின்னையன் வலக்கை மட்டும்
என் முதுகில் இருந்தது
நிறைய கறியோடும் கரியோடும்..

இத்தனை நாளில்
யாரிடமும் கேட்டதில்லை
கேட்கவும் பயமாயிருந்தது
அம்மாவும் பிள்ளையும் எங்கெயென..
கேட்டால், செத்ததாக சொன்னால்..
நிச்சயமிருக்காது வேறுமுகாமில்தான்
இருக்க வேண்டும்..

பிள்ளைக்கு பாலைத்தவிர
வேறெதும் எடுக்காதே
பாலெங்கே கிடைக்கும் முகாமில்
ஒருவேளை பாலில்லாமல்..
போதும்
இதற்குமேல் நினைக்க வேண்டாம்..
இந்த பிள்ளைச்சூடு போதும்
பிள்ளைக்கு இன்னும்
பேர்கூட வைக்கலையே..
வறண்ட கண்களை
வெற்றாய் துடைத்தேன்..

வழக்கமான சத்தங்களுக்கிடையில்
புதிதாய் சில ஊடுருவலிருந்தது
யாரோ தமிழ்நாட்டிலிருந்து வர்றாங்களாம்
யாரோ இல்லை அரசியல்வாதிகள்..
உன் பிள்ளையைத் தேடி தரச்சொல்லு
இடுப்பொடிந்த இரண்டாமவள் சொன்னாள்

இந்த இளஞ் சூட்டில்
பிள்ளையைத் தடவும்
எனக்குத் தெரியும்
இவங்களை நம்பினால்
இந்த பிள்ளைச்சூடும்
பறி போய்விடுமென..


.

Wednesday, October 7, 2009

உலகம் மீதம் உள்ளது..

உன்னையும்
உன் நினைவுகளையும்
தவிர்த்தும்
உலகம் மீதம் உள்ளது..

மனப்பாறை மீது
மயக்க அலையாய் மோதி
மணல் பாதையாய் மாற்றிய
உன்னை விடவும்
உயர்வாய் சில விசயங்கள்
உள்ளன உலகில்..

உலகில் உள்ள
ஒலியெல்லாம்
உன் பெயரின் உச்சரிப்பாய்
உணர்ந்த நானே
இதையும் சொல்கிறேன்
இதயம் திறந்து சொல்கிறேன்..

என் கனவுகளை
உன் நினைவுகளோடு
உள்ளத்தில்
உறங்க வைத்து விட்டேன்..

ஊடுருவும்
விழிச்சொருகலையும்
உதட்டோர வளைவையும்
தவிர்த்தும்
உலகம் மீதம் உள்ளது..

-- 14/01/2000
(பழைய டைரியின் பரிகாசம்)

.

Thursday, October 1, 2009

வாய்மையே வெல்லும்



"என் எண்ணங்கள் என் செயல்களை கட்டுப்படுத்த அனுமதித்தால், நான் வீணாவேன். அதே சமயம், நாம் இந்த கெட்ட எண்ணங்களைப் பற்றி கவலைப்படக் கூடாது." - மஹாத்மா காந்தி

.

Wednesday, September 23, 2009

எல்லாம் 'காந்தி'ய வழியில்..

காந்தியை விற்றே
பட்டம் வாங்கினேன்
வேலை வாங்கினேன்..

காந்தியை விற்றே
நிலங்களை வாங்கினேன்
சில நியாயங்கள் வாங்கினேன்..

காந்தியை விற்றே
காரியம்பல சாதித்தேன்
சாராயமும் குடித்தேன்..

ஆனால்
காந்தியை வாங்கித்தான்
திருமணம் செய்தேன்
ஓட்டும் போட்டேன்..

விற்கும்போது
சிரித்த காந்தி
வாங்கும் போதும்
சிரிக்கிறார்..

இன்னுமா சந்தேகம்
காந்தி
தேசப்பிதா தான்..

.

Wednesday, September 16, 2009

மொட்டை மாடி..


எத்தனை முறை
எண்ணிப் பார்த்தாலும்
எண்ணிக்கை
முற்றுப் பெறவில்லை

முழுக்க சிதறிய
நட்சத்திரங்களை
எண்ணி எண்ணி
விழி சோர்ந்தேன்..

தன் முந்தானையால்
என்னை மூடி
கையால் தட்டித்தட்டி
கதை சொல்கிறாள் பாட்டி..

இறந்தாலும் பெண்மனம்
நிம்மதியாய் இருப்பதில்லை
பகலில் பயந்திருந்தாலும்
இரவில் யமனுக்கு
போக்குக் காட்டி
நட்சத்திரமாய் வந்து
தமது பிள்ளைகளை
பார்க்கின்றனர் பெண்கள்

நூலிழையில் தொடர்பவிழ
நிகழ்காலத்தில் விழுந்து
சிதறிய நட்சத்திரங்களுள்
தேடிக் கொண்டிருக்கிறேன்
எங்கேயிருக்கிறாள் பாட்டி..

.

Monday, September 14, 2009

நடிகர் கெட்டால்..

ராணுவத்துல இருந்து ஓய்வுபெறுபவர்கள் என்ன பண்ணுவாங்க.. ஏதாவது ஒரு அரசாங்க அல்லது தனியார் அலுவலகத்தில் காவலாளியா இருப்பாங்க. ஆசிரிய பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்கள் பக்கத்து வீட்டுல இருக்குற குழந்தைகளுக்கு கட்டணம் வாங்கியோ வாங்காமலோ வகுப்பெடுப்பங்க, மத்தவுங்க எதாவது பெட்டிக் கடை வச்சு உக்காருவாங்க. சிலர் ஊர்ஊரா சுத்தி கடவுளத்தேடிட்டு இருப்பாங்க, பலர் வீட்டுல இருக்குறவுங்க பிரச்சனைய தலைல போட்டு உருட்டிட்டு இருப்பாங்க,

அந்த வரிசையில் நடிகர்கள் நல்லா சம்பதிச்ச பிறகு எப்போ நாம நடிச்சா நம்ம குடும்பமே உக்காந்து படம் பாக்க மாட்டங்கனு தெரிஞ்சவுடன் எடுக்கிற அடுத்த முடிவு எதாவது அரசியல் கட்சில சேருறதுதான். அவுங்க தகுதிக்கு ஏற்ப குவாட்டர்,பிரியாணி கட்சிப்பொது கூட்டங்களோ, எம்.எல்.ஏ,எம்.பி,மந்திரிப் பதவிகளோ கிடைக்கும். வாய்ஸ் இருக்குறவுங்க தனிக்கட்சி ஆரம்பிப்பாங்க. திரைத்துறையில வாரிசுகளை வளர்க்க முடியாதவர்கள் அரசியல்ல வாரிசுகளை வளர்க்க முயற்சி பண்ணுவாங்க. 'ஏதோ கெட்டா குட்டிசுவரு' சொல்லுறது போய் இப்போலாம் 'நடிகன் கெட்டால் அரசியல்'னு தான் சொல்லுறாங்க.எது எப்படியோ நமக்கும் வயசான, செயல்படாத பஞ்ச் டயலாக் மட்டும் பேசத்தெரிந்த தலைவர்கள் கிடைப்பாங்க. அவுங்க ஒத்திகை இல்லாத நடிப்ப பார்க்க ஒரு சந்தர்ப்பம் அமையுமென்றாலும், அது எவ்வளவு கொடுமையானதென்று தமிழக மக்களுக்கு நிறைய அனுபவம் இருக்கு.

இப்படி போய்ட்டு இருந்த தமிழக அரசியல்ல கொஞ்ச நாளா ஒரு உண்மை கலந்த வதந்தி. விஜய் தனிக்கட்சி ஆரம்பிப்பார், இல்லை தேசிய கட்சியில் சேரப்போறார். கேட்க கொஞ்சம் அதிர்ச்சியாவும் எனக்கு கொஞ்சம் ஆர்வமாவும் இருந்தது. விஜயோட அரசியல் பிரவேசம் பற்றி நிறைய கருத்துகள் இருந்தது. பொதுவா அரசியலில் 'தாதா'க்களுக்கு அப்புறம் தாத்தாக்களுக்குத் தான் முதல் மரியாதை. நீங்க 'தாதா'வாவும் தாத்தாவாவும் இருந்தீங்கனா சீக்கிரமா ஏதாவது அரசியல் கட்சில சேருங்க. கூடவே திரைத்துறையில இருந்தீங்கனா தைரியமா அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம்.

இந்தியாவில் இளைஞர்களை அரசியலில் ஈடுபடுவதை அரசியல்வாதிகளோ, பொதுமக்களோ யாருமே விரும்புவதில்லை, விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க போறாருனதும் நிறைய எதிர்கருத்துகள், திரைத்துறையில் அவர் சாதிக்க இன்னும் நிறைய இருக்குனும் இன்னும் சில நூறுகதாநாயகிகளுடன் தயிர்சாதம் ரெடி பண்ண வேண்டுமென கூக்குரல்கள். ஆதரவு தரப்பிலிருந்துதான் இந்த கருத்துகள்னு பார்த்தா எதிர்தரப்பிலும் அதே கருந்துகள் தான். இங்க என்ன கிழிச்சுட்டாருனு அங்க போய் கிழிக்கப்போறார்னு கேட்குறாங்க. சரி அப்போ இங்க இருந்து கிழிச்சுட்டே போறேனு அவரும் வடுமாங்கா ஊறல தேடி போய்ட்டார். சினிமா தப்பிச்சதுனு(காமெடி கீமெடி பண்ணலியே) சிலரும், அரசியலும் தப்பிச்சதுனு சிலரும் சொல்லுறாங்க, எது தப்பிச்சதுனு போகப்போக தெரியும்.

எப்படியோ 60 வயசுல விஜய் அரசியல குதிப்பார்னு நம்பலாம். அதுவரை அவரோட அப்பா ஏதாவது கட்சில சேர்ந்து பயிற்சி எடுத்துக்கலாம். நமக்கு இன்னுமொரு தாத்தா தலைவர் தயாராகிறார்.

ஒரு குறள்:

'ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்து படும்'

குறள் விளக்கம்:

முறையாக செய்யப்படாத முயற்சியானது எத்தனை பேரின் துணையிருந்தாலும் இறுதியில் முடங்கிப் போய்விடும்.


ஒரு முல்லா கதை:

மனைவி இறந்து விட்டதால் 60 வயதில் மறுமணம் செய்யபோவதாக முல்லா தன் நண்பர்களிடம் சொன்னார். நண்பர்களெல்லாம் 'காலம் போன காலத்துல சும்மா வெந்தத தின்னுட்டு விதி வந்தா சாவோமின்னு இருக்காமா, கல்யாணம் அவசியம்தானா?' கேட்டாங்க.
முல்லாவும் 'வயசான காலத்துல வாய்க்கு வக்கனையா கொஞ்சம் சாப்பிட்டு சாகலாம்னுதான் கல்யாணம் பண்ணிக்குறேன்'னு சொன்னார். உடனே நண்பர்கள் 'வர்றவ மோசமானவளா இருந்து சரியா சமைச்சுப் போடாம இருந்தா என்ன பண்ணவீங்க'னு சொல்ல, உடனே முல்லா சொன்னார் 'அவள் கூட இருக்கப்போறது கொஞ்ச நாள் தானேனு மனச தேத்திக்கிட்டு இருப்பேன்'


.

Saturday, September 5, 2009

என்ன செய்வது?

துரத்திக் கொண்டிருந்தேன்
தூரத்தில் அவள்..
களைத்து விழுந்தேன்
வியர்வையாய் வெளியேறின
உள் உறைந்த காமங்கள்..

களைத்த முகத்தில்
கூந்தலால்
குறுக்கு கோடிட்டாள்..
உயிர் தெளித்து
விழிதிறந்து எட்டிப்பிடிக்கையில்
அவள் இளஞ்சிரிப்பு மட்டும்
இமைகளுக்குள் சிக்கிக்கொண்டது..

சிரிப்பு தந்த குறிப்புகளை
சிதறாமல்
பிரதிகளெடுத்து
மூளை நரம்புகளின்
மூலைமுடுக்கெல்லாம்
சேமிக்க செய்தியனுப்பினேன்..

இன்னும் இமை திறக்கவில்லை..
விழியுள் உறைந்த
அவள் அடையாளத்தை
வெளியிட விருப்பமில்லை..
இப்படியே இறந்துவிடவும் சம்மதமே..

ஆனாலும் பயமிருக்கிறது
கண்தானம் செய்திருக்கிறேனே
மருத்துவர் யாரேனும்
வலிந்து இமை திறந்தால்..


.

Wednesday, July 1, 2009

தூக்குவாளியும் மஞ்சப்பையும்..

'கணேஷ் போய் 3 புரோட்டா வாங்கிட்டு வர்றியா.. தூக்குவாளி கழுவி வச்சுருக்கேன் பாரு!.. அப்பா சட்டயில பணமெடுத்துக்கோ..' அம்மா சொல்லும் போதே வயர் கூடய தேட ஆரம்பிச்சுடுவேன். வயர் கூட தான் அப்பலாம் எனக்கு பிடிக்கும். 'சும்மா தேடிட்டு இருக்காம அந்த மஞ்சப்பைய எடுத்துட்டு போ' மஞ்சப்பை எல்லாம் 12 வயசு பெரிய மனுசனான எனக்கு கெளரவக் குறைச்சல் தான். எங்கள் வீட்டு அலமாரியில் மேல்தட்டின் ஓரத்தில் மஞ்சள் பைகள் மடித்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதெல்லாம் எப்போதாவது செல்லும் பணக்கார வீட்டு கல்யாணத்திலும், துணி கடையிலும் கொடுக்கப்பட்டவையாக இருக்கும். அந்த மஞ்சள் பைகள் துவைத்தும் பயன்படுத்திய நாட்கள் நினைவில் இருக்கு. எனக்குப் பிடிச்ச வயர் கூடைகளை அத்தை பெண்கள் பின்னித் தருவார்கள். பள்ளி விடுமுறை காலங்களில் அவர்கள் வீட்டில் 2,3 வண்ணங்களில் 5,6 வயர் ரோல்கள் இருக்கும். வண்ணக் கலவையாக பின்னப்படும் அந்த வயர் கூடை எனக்கு சில வேளைகளில் பள்ளி செல்லவும் பயன்படும். அம்மாவோடு மார்கெட்டுக்கும், சொந்த பந்த வீடுகளுக்கும் பயணப்படும். செல்லும் வீடுகளிலெல்லாம் வயர் கூடை பின்னலைப் பற்றி கேட்காதவர்கள் இருந்ததில்லை (இருந்தாலும் அவர்களிடம் அம்மா அதை சொல்லாமல் வந்ததில்லை). காய்கறி வாங்கணுமா? துணிமணி வாங்கணுமா? டீ,பால்,ரோஸ் மில்க் வாங்கணுமா? கோயிலுக்கு போணுமா? எல்லாத்துக்கும் அன்னைக்கு தேதில எங்க வீட்டில் தூக்கு வாளியும் மஞ்சப்பையும் வயர்கூடையும் முக்கியம். அதே போல காரச்சேவு, கருப்பட்டி மிட்டாய், சில்லு கருப்பட்டி யெல்லாம் பனை ஓலையில் செய்யப்பட்ட பேக்கிங்ல (அதுக்கு பேரு யாருக்காவது தெரியுமா பாஸ்) தான் வங்கிட்டு போவோம்.

இன்னைக்கு தூக்குவாளியையும் மஞ்சப்பையையும் சீந்த ஆளில்லை, எங்க போய் எவ்வளோ வாங்கினாலும் வீட்டிலிருந்து பணம் மட்டும் எடுத்துக்கொண்டால் போதும். சென்னையில் கரும்புசாறை கூட பாலித்தீன் கவரில் வாங்கிட்டுப் போறாங்க. நாம நோகாம நொங்கு தின்னுட்டுத்தான் இருக்கோம். ஆனா இது நம்ம வருங்கால சந்ததியினருக்கு எவ்வளோ பெரிய பாதிப்பை ஏற்பத்துமென்று நமக்கு தெரியவில்லை. மெத்த படித்த நம்மில் பலர் தெரியாதது போல் நடிக்க பழகிக் கொண்டுவிட்டோம். நம்மை நாமே சீர்தூக்கிப் பார்க்க புத்தியில்லை பொறுமையில்லை, ஆனால் அரசியல்வாதிகளை, நடிகர்களை குற்றம் சொல்ல பழக்கப்படுத்திக் கொண்டோம். நமது முப்பாட்டன்கள் நமக்காக கரடுமுரடான காடு, மலைகளை இரத்தத்தை வியர்வையாக சிந்தி திருத்தி பண்பட்ட விளைநிலங்களாக மாற்றிக் கொடுத்தனர், இன்று நாம் நமது வசதிக்காக நமது பேரப்பிள்ளைகளுக்கு சுகாதாரமற்ற உலகை விட்டுச்செல்லப் போகிறோம். முன்னோர்கள் நமது சுமையை குறைத்தார்கள், நாம் நமது சுமையையும் சேர்த்து நமது குழந்தையின் தலையில் இறக்குகிறோம். (மன்னிப்பே கிடையாதுடா கணேசா உனக்கு)

தொடர்புடைய இன்றைய செய்தி:

#ஆகஸ்ட் 15 முதல் மெரினாவில் பிளாஸ்டிக் பொருட்களை விற்க, பயன்படுத்த தடை.(இந்த தடை காண்டத்திற்கும் பொருந்துமா?!)


சில கேள்விகள்:

1. தமிழகம் முழுதும் குறைந்த பட்சம் சென்னை முழுதும் இதை செய்தால் என்ன?
2. கட்டாய தலைகவசம் (ஹெல்மெட்) போல இதுவும் கைவிடப்படுமா?
3. காகிதப் பை, சணல் பை உற்பத்தி நிறுவனங்களுக்கு மானியமளித்து குறைந்த விலையில் கிடைக்கச்செய்தால் என்ன? ( சினிமாவோட கேளிக்கை வரியை ரத்து பண்ணுறத விட இது ரொம்ப நல்லது, காடுகள் அழியும் அபாயமும் இருக்கு இதுல)
4. தமிழகத்தில் பிளாஸ்டிக், காகிதம் மறுசுழற்சி முறை செய்யும் ஆலைகளின் தற்போதைய செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன? அரசின் கவனம் இந்த நிறுவனங்களுக்கு இருக்கிறதா?

தொடர்புடைய பதிவுகள்:
1. சில அதிர்ச்சிகர உண்மைகள்
2. பிளாஸ்டிக் கலாச்சாரம்



.

Tuesday, June 23, 2009

தூக்கம் நெய்த பொழுது..

தூக்கம் கடவுள் கொடுத்த வரம். ஆனால் அந்த தூக்கம் சிலருக்கு சுலபமாய் கிடைப்பதில்லை. நானும் பல தூக்கம் வராத இரவுகளை கடந்திருக்கிறேன். இன்னும் தூக்கம் வராத இரவுகள் எத்தனை இருக்கிறதோ..

இப்போதாவது பரவாயில்லை, நட்பும் காதலும் வெற்றியும் தோல்வியும் குழப்பமாய் இருந்த நாட்களில் நான் தூக்கத்தை புரிய முயற்சித்து தோல்வியடைந்தேன். அதற்கு முன்பு எங்க வீட்டில் எங்க அப்பாதான் என்னோட தூக்கத்தின் முதல் எதிரி. குடிக்கும் பழக்கம் இருந்ததால் எனக்கும் அம்மாவுக்கும் இரவு அவர் வீடு வந்து சேரும் வரை தூக்கம் வராது. விடிய விடிய முழித்திருந்த நாட்களெல்லாம் உண்டு. அதே போல பத்தாவது படிக்கும் போதிலிருந்து தேர்வு நாட்களிலும் எனக்கு தூக்கம் வருவதில்லை. எந்த தேர்வுக்கும் நான் முழுமையாக படித்ததில்லை அப்புறம் எப்படி தூக்கம் வரும். ரெண்டு நாள் படிப்பு மிச்சம் இருக்கும் ஒவ்வொரு தேர்வின் முதல் நாள் இரவிலும். ஆனாலும் அவற்றையெல்லாம் காலையில் சீக்கிரமெழுந்து படித்து விடலாமென அசாத்திய தைரியத்தோடு படுத்துவிடுவேன். ஆனாலும் அந்த தைரியம் ஏனோ என்னுடைய தூக்கத்துக்கு வராது. நாலு மணி அலாரத்துக்கு ஒரு மணியிலிருந்து 5 தடவ முழிச்சு முழிச்சு பாத்து சரியா நாலு மணிக்கு தூங்கி போயிருவேன். படுத்தவுடன் தூங்கும் சில நண்பர்களைப் பார்க்கும் போது பொறமையாகத்தான் இருக்கும். துபாயில் இருந்த நாட்களில் சக்தி FM ஐ காதிற்குள் நுழைத்தபடியே தூங்கி போயிருக்கிறேன்.

அதே போல தூங்கியே துன்பப்படுபவர்களும் உண்டு. பள்ளிகாலத்தில் ஜெயக்குமார் என்ற தோழன் எப்போதும் உட்காந்து கொண்டே தூங்குவான், அவனை தூங்கு மூஞ்சி என்றே அப்போது கூப்பிடுவோம். அவன் பேசிக்கொண்டு இருக்கவேண்டும் இல்லையென்றால் எதாவது வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும், உட்காரச்சொல்லி பேசாமல் இருக்கச்சொன்னால் இரண்டு நிமிடத்தில் தூங்கிவிடுவான். தூக்கமென்றால் ஆழ்ந்த தூக்கமல்ல, எங்க ஊர் பக்கம் அதை கோழித்தூக்கம் என்பர், தூங்கிக் கொண்டே தலை கவிழ்ந்து பின் சடக்கென்று நிமிர்ந்து திருதிருப்பர். பாடம் நடத்துகையில் அவனை பக்கத்தில் இருப்பவர்கள் தொடையில் அடிக்கடி தட்டிக்கொன்டு இருப்பர்.அவனை ஆசிரியர்கள் எவ்வளவோ அடித்தும் அவன் தூங்குவதை மட்டும் விடவில்லை. ஒரிமுறை அவன் தூங்கிக் கொண்டு ஆசிரியரின் காலில் முட்டியிருக்கிறான் (அவன் தூங்குவானென தெரிந்துதான் ஆசிரியர் அவனை அருகில் வந்து அமர்ந்து கவனிக்கச் சொல்லுவார். அவர் பாடம் நடத்தும் சத்ததையும் மீறி அவன் தூங்கி விழுவான்) பிறகு தான் தெரிந்தது அது ஒருவகை நோய் என மருத்துவ சான்றிதழ் கொண்டுவந்து அவனுடைய அப்பா பள்ளியில் கொடுத்தார். அதன் பின்பு ஆசிரியர்கள் அவனை அடிப்பதை விட்டனர். பக்கத்தில் இருப்பவனுக்கு வேலை வந்தது, அவனை தட்டி எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

அதே போலத்தான் எங்க பாட்டி காலை நீட்டி உக்காந்து கொண்டே தூங்குவார். எங்க 'அம்மா உக்காந்துகிட்டே தூங்கினா வீட்டுக்கு ஆகாது போய் படுத்து தூங்குங்க'னு சொன்னா பாட்டிக்கு கோவம் வந்துரும். 'நா என்ன இழுத்துக்கிட்டா கெடக்கேன், போய் படுக்குறதுக்கு, நா ஒண்ணும் தூங்கல..' அப்படினு சொல்லிக்கிட்டே 2 நிமிசத்தில் தூங்கி விழுவார். கடைசி நாள்வரை பாட்டி ஒத்துக் கொண்டதே இல்லை தான் உக்காந்து கொண்டே தூங்குவதை, அதே போல் பகல் பொழுதில் உடல் நிலைசரியில்லை என்றால் கூட படுத்து நான் பார்த்ததும் இல்லை. பாட்டியை பொருத்தவரை வேலையிருக்கோ இல்லையோ எல்லாரும் தூங்கியபின் தான் தூங்கி, எல்லாருக்கும் முன் எழுந்து விடுவார். இப்போ எங்க அம்மா காலம், காலையில் பேப்பர் படித்துக் கொண்டோ, வாரமலர் படித்துகொண்டோ அப்படியே தூங்கிவிடுகிறார். ஆனால் TV பார்த்துக் கொண்டே தூங்குவது இல்லை. அது அப்பா, செய்தி பார்த்துக் கொண்டே தூங்கிவிடுவார், அவர் தூங்கிட்டாரேனு நாம சேனல் மாத்தினால் முழித்துவிடுவார், 'ஏண்டா செய்திய மாத்துற, கேட்கணுமில'னு கத்துவார்.

இப்படி தூங்குபவர்கள் ஒருபுறமிருந்தாலும், என்னைப் போல படுத்ததும் தூக்கம் வராதவர்கள் என்ன செய்வது? அந்த நேரங்களில் இளைய ராஜாவை காதிற்குள் இசைக்கச் சொல்லி கேட்பது ஒரு தனிசுகம். மொட்டை மாடியில் தெளிந்த வானம் பார்த்து தூக்கம் வராமல் படுத்திருப்பதும் ஒரு சுகம். தனிமையை விரும்புபவர்கள் அதை மிகவும் ரசிக்க முடியும். கல்கி, பொன்னியின் செல்வனில் பூங்குழலி தனிமையை ரசிப்பதை அழகாக சொல்லியிருப்பார். இன்றைய வாழ்வில் தனிமை சாத்தியப்படுவது, படுத்த பின் தூங்கும் முன் இருக்கும் இடைப்பட்ட நேரம்தான். அந்த இடைப்பட்ட நேரத்தில் அன்றைய நாளை அசை போட்டவாறே அடுத்த நாளின் நடவடிக்கைகளை வரிசைப்படுத்திக் கொள்பவர்கள் புத்திசாலிகள்.

"...

இரையும் சந்தை
அலறும் ரயில்
பதறும் வாகனம்
உயிர்வாங்கும் ஒலிவாங்கி
விஞ்ஞானப் பொய்சொல்லும் விளம்பரங்கள்..

அத்தனை லெளகீக சப்தங்களும்
சிறுகச் சிறுகத் தேய்ந்தடங்க
கேளாத சப்தங்கள்
கேட்குமிந்த இரவில்

பூமிக்குள் வேர்கள்
நீர்குடிக்கும் ஒலியும்
பிறைநிலா வளரும் மெல்லிய ஓசையும்
நிழல்கள் அசையும் நிசப்த சத்தமும்
இன்றுதான் கேட்கிறேன்
முதன் முதலாக

..."

- வைரமுத்து
(ஒரு தூக்குக் கைதியின்
கடைசி இரவு)

.

Saturday, June 20, 2009

மாம்பழத்து வண்டு

பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே என்ன பதிவு போடலாம்னு யோசிச்சுட்டு இருந்தப்போ அறையில் நண்பன் வாங்கிவந்த மாம்பழம் 'எனக்கென்ன குறைச்சல் என்ன பத்தி போடக்கூடாதா'னு கோவத்துல ஒரு ஓரத்தில சிவந்து சொன்னது. நிஜமாத்தானா! மாம்பழம் பேசுதானு யோசிச்சா!?

'ஏன் பேசக்கூடாதா.. நேத்து வந்த கணினி கூட நீ பேசிட்டு இருக்குறப்போ.. மழை தோன்றி மனிதன் தோன்றாக்காலத்தே முன் தோன்றிய மாம்பழம் நான் பேசக் கூடாதா..'னு சத்தம். சொன்னா நம்ப மாட்டீங்க. சத்தம் போட்டுகிட்டே அலமாரில இருந்து கீழ விழுந்து உருண்டு வந்து கணினி பக்கத்துல உக்காந்துருச்சு.

'மாம்பழம் தமிழர்களோட முக்கனில முதல்கனி. உன்னப் பத்தி பதிவு போடாம வேறென்ன பணி'னு ஆரம்பிச்சுட்டேன்.

'நீ பதிவு போட்டு ஒண்ணும் ஆகப்போறதில்ல. இந்திய அரசாங்கம் 'தமிழ செம்மொழி'னு அறிவிச்ச மாதிரிதான். உனக்கு வேணா அதனால பெருமையா இருக்கலாம், பின்னாடியே கன்னடம், தெலுங்கு எல்லாம் செம்மொழினு அறிவிச்ச மாதிரி நீயும் வாழப்பழம், பலாப்பழம், கொய்யாப்பழம்னு பதிவப் போடுவ'-இது மாம்பழம்தான்.

என்ன எகத்தாளம்! அட மாம்பழமே, தமிழ செம்மொழியாக்கின தலைவருக்கு ஓட்டு போட்ட மாதிரி உன் பதிவுக்கு எனக்கு யாரவது ரெண்டுபேரு ஓட்டு போடமாட்டங்களா?

'போட்டுட்டாலும் அத நீ வாங்கிட்டாலும்.. கார்க்கி மாதிரி 2 லட்சம் ஹிட்ஸ் வாங்கப் போறியா? இல்ல.. வெங்கி மாதிரி சங்கமம் போட்டில முதல் பரிச வாங்கப் போறியா? ஒரு மண்ணும் இல்ல. இருந்த ஒரு பிளாக்கையும் தொலச்சதுதான் மிச்சம்'-சந்தேகமென்ன இது மாம்பழம் சொன்னதுதான்.

என்னடா இது, ஆப்பிள்னு கூட ஒரு கணினி நிறுவனம் இருக்கு; மாம்பழம்னு ச்சி.. mangoனு எதுமில்லையே.. இம்புட்டு அறிவு இதுக்கு எப்படினு யோசிக்குறதுக்குல்ல.. யோசிக்கவிடுதா அது..

'என்ன இந்த கவிஞர்கள் படுத்துறபாடு போதாதுனு நீ வேற பதிவு போட்டு படுத்த போறியா'

'அட மொழு மொழு மாம்பழமே உன்ன கவிஞர்கள் காதலோட பாடுறாங்க அது பிடிக்கலயா'

எவன்யா காதலோடு பாடுறான்? எல்லாரும் காமத்தோட தான் பாடுறாங்க.
மாம்பழமா மாம்பழம்.. மல்கோவா மாம்பழம்னு ஒரு பாட்டு..
தென்னந்தோப்புல நின்னுட்டு இருந்தாலும் 'மாந்தோப்பில் நின்றிருந்தே'னு ஒரு பாட்டு..
ரெண்டயும் விட்டா நான் மார்க்கெட்டுக்கு போகாம இருக்குறத பத்தி பாடுறது..
எதுமே இல்லட்டா என்ன தொட்டில்ல போட்டு தாலாட்டு பாடுறது..
நான் கேட்டேனாயா உங்ககிட்ட..

பேசு மாம்பழமே பேசு.. 'கககபோ' கட்சியின் சின்னமாய் இருந்துக்கிட்டு நீ இதுகூட பேசலனா எப்படி? விட்டா சிகரெட் பிடிச்சுட்டு மாம்பழம் தின்னுறாங்க மகாபாவிகள்னு சொல்லுவ போலயிருக்கே..

சொன்னாத்தான் என்ன தப்பு? அவ்வளவு ஏன்.. நீ என்னைக்காவது என்ன காதலோட வேணாம்.. பழமா பாத்துருக்கியா.. காமப்பார்வதான் பாக்குற..

போதும் போதும் நிறுத்து.. என் பிளாக்குன்னு ஒரு வரையறை இருக்கு.. அதுக்குமேல போடமுடியாது..

அதான் தெரியுமே உன் யோக்கியத.. சில்லறைத் தேடல் பதிவ படிச்சப்பவே..

அடக்கடவுளே! இது வேறயா.. சரி சரி ஒரு சமாதானத்துக்கு வருவோம்.. நான் உன்னப் பத்தி உயர்வா ஒரு பதிவு போடுறேன்.. ஆனா ஒரு கேள்விக்கு பதில் சொல்லணும்..

அதான; உனக்கு கேட்கத்தான தெரியும்.. நீ என்னைக்கு பதில் சொல்லியிருக்க. பயப்படாம கேளு..

அட வண்டு குடைஞ்ச மண்டு மாம்பழமே! சில்லறைத்தேடல தேடிப் படிச்ச நீ 32 கேள்வி பதில்கள படிக்கலயா? சரி விடு.. திருவிளையாடல் படத்துல ஞானப்பழம்னு உன்னத்தான் காட்டுவாங்க.. நீ தான் ஞானப்பழமா?

இந்த நக்கலுக்கு மட்டும் குறைச்சலில்ல..அடுத்து என்ன கேட்பனு எனக்கு தெரியும்.. ஞானப்பழத்துக்கு கொட்டையிருக்கானு கேட்ப..உன்ன சொல்லி குத்தமில்ல.. எல்லாம் தமிழ் சினிமாவச் சொல்லணும்..

தகப்பன குத்தஞ்சொன்னாலும் பொறுத்துக்கலாம்.. தமிழ் சினிமாவ குத்தம் சொன்னா பொறுக்குமா தமிழ் மரபு? பொங்கியெழுறதுதான தமிழர் சம்பிரதாயம்.. பொங்கியெழுந்துட்டேன்.. அதாங்க மாம்பழத்த சாப்பிட்டுட்டேன்..

சாப்பிட்ட பிறகுதான்.. மனசுக்குள்ள சின்னதா ஒரு கேள்வி உறுத்திக்கிட்டே இருந்தது.. அதான் இப்போ கேட்குறதுக்கு மாம்பழம் இல்லையே.. உங்க கிட்டயே கேட்டுடுறேன்..

கொட்டையில்லா திராட்சை மாதிரி கொட்டையில்லா மாம்பழம் எங்க பாஸ் கிடைக்கும்?

'எங்க கிடைச்சாலும் நீ சொந்தமா காசு போட்டு வாங்கி திங்க போறதில்ல.. ஓசி மாம்பழத்துக்கு ஒரு பதிவா?' - இது வயித்துக்குள்ள போன மாம்பழத்தோட வாய்ஸ் இல்லீங்க; மாம்பழம் வாங்கிட்டு வந்த நண்பன்.

.

Friday, June 12, 2009

சில்லறைத் தேடல்கள்

தொலைக்காட்சி
அலைவரிசைகளை
அலசும் துரத்தலில்..

இணைய அரட்டையின்
தட்டச்சில் உணர்விறக்கி
அவசரமாய் துடைத்தெறியும்
உறவு கதகதப்பில்..

புரட்டும் பக்கங்களில்
தேக்கிய ஆசைகளை
நீர்த்துவிடும் பாவனையில்..

கோவில் சிற்பங்களில்
திருநீறை தட்டிவிட்டு
விரைந்தோடும் பார்வையால்
விடைதேடி தாவுகையில்..

ஓடும்பேருந்தில்
சிறிதாய் பெரிதாய்
அழுத்தமுமாய்
உறுத்தும் உரசலில்..

சாலையில்,வாகனத்தில்
கடற்கரையில்,பூங்காவில்
கடக்கும் இணைகளை
தடவும் பெருமூச்சில்..

இன்னும்
ஆறுமாதமோ ஒருவருடமோ
முடிந்துவிடும்
இந்த சில்லறைத்தேடல்கள்
சில்லறைத்தட்டுப்பாடு
தீரும்போது..
இல்லாவிடில்
எனக்கான சில்லறை
உன்னால் தேடப்படும் போது..

..

Tuesday, June 9, 2009

முற்றுப்பெறாத கேள்விகள்

இலங்கை தமிழர்களின் மீது இந்தியாவுக்கு அக்கறையிருப்பதாகவும் அவர்களது நல்வாழ்விற்காக 500 கோடி ரூபாய் வழங்கப்படவிருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். தமிழக முதல்வர் 1000 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை தமிழ் மக்களின் புனரமைப்பிற்காக நிதி வழங்குவது அவசியமான ஒன்றுதான். ஆனால் அவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேரும் என்பது எவ்வகையில் உறுதி செய்யப்படுமென்று தெரியவில்லை. அந்த 1000 கோடிப் பணம் பயன்படுத்தப்படுவதை இந்தியா எதேனும் குழு அமைத்து கண்காணிக்குமா அல்லது 1000 கோடிக்கு இரண்டு தவணையாக இலங்கைக்கு காசோலை அனுப்பி விட்டு பாரத பிரதமரும், தமிழகத் தலைவரும் பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தை பங்கிட்டுகொள்வார்களா எனத் தெரியவில்லை. 1000 கோடிப்பணம் கொடுக்கப்படும்போது நமது மேற்பார்வையின் கீழ் மட்டுமே அவை செலவழிக்கப்பட வேண்டுமென்று கேட்க இந்தியாவிற்கு உரிமையிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை, கிடைக்கும் நிதியை தமிழ் மக்களின் புனரமைப்பிற்கு பயன்படுத்துவார்கள் என்பது நம்பமுடியாத விசயம். அதே போல சில தமிழக எம்.பி களும், இங்குள்ள ஈழதமிழ் ஆதரவாளர்களும் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்பி அங்குள்ள தமிழர்களின் பகுதிகளை பார்வையிடலாம். அதையெல்லாம் விட இங்குள்ள இலங்கை அகதிகளின் முகாம்களுக்கு சென்று அவர்களின் நிலையையும் கருத்தில் கொண்டால் அவர்களின் முன்னேற்றத்திற்கும் ஏதாவது வழிபிறக்கும். (எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம்: புலம் பெயர்ந்து மற்ற நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் போராடுகிறார்கள். போராட்டங்களுக்கு தார்மீக மற்றும் பண உதவி செய்கிறார்கள். இந்தியாவிற்கு வந்துள்ள இலங்கை அகதிகளின் நிலை என்ன? அவர்கள் குரல் கொடுக்க இந்திய இறையாண்மையில் இடமில்லையா? அல்லது அவர்கள் இலங்கையை மறந்து விட்டர்களா?)

"தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு"

குறள் விளக்கம்: தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே நாம் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.

தேர்தல்நேர திடீர் ஈழஆதரவாளர்கள் இப்பொது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதென இலங்கை அரசு அறிவித்தவுடன் ஈழத்தமிழர்கள் அனைவரும் மாண்டுவிட்டார்களென தலைமுழுகி விட்டார்களா? ஈழமக்களின் எதிர்கால வாழ்வில் நமக்கு அக்கறையில்லையா? ஈழமக்களின் இளைய தலைமுறையை நாம் புறக்கணிக்கலாமா? வைகோ, ராமதாஸ் போன்றவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறர்கள்? தலையில் முள் கிரீடம் ஏதுமில்லை. தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தும் அளவிற்கு பேச விடுதலைப்புலிகளும் இல்லை. ஈழத்தமிழர்களுக்காக திருமா,வைகோ,ராமதாஸ் போன்றவர்கள் தைரியமாகப் பேசி மத்தியில் இருக்கும் வடஇந்திய எம்.பிகளிடம் ஈழமக்களுக்கான ஆதரவைத் திரட்டலாமே. ஏன் தமிழக குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டும். வட இந்திய ஊடகங்களும் மக்களும் தமிழர்களுக்கு எதிராக இருப்பதால் தானே விடுதலைப் புலிகளுடனான போர் பயங்கரவாதத்திற்கு எதிரான போராக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அருந்ததிராய், மேதா பட்கர், இப்போதைய சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்களின் ஈழமக்கள் ஆதரவை நாம் முறையாக பயன்படுத்தவில்லை.

ஈழ ஆதரவாளர்கள் இன்றைய ஈழமக்களின் எதிர்கால வாழ்வை முன்னிட்டு என்ன செய்யப் போகிறார்கள் அல்லது இவர்கள் எண்ணமெல்லாம் தமிழக மக்களை உணர்ச்சிவசப்பட செய்து அதில் பலன் பெறுவது மட்டும் தானோ என நினைக்கத் தோன்றுகிறது. நமது பத்திரிகைகளும் நயன்தாராவின் ரகசிய திருமணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. ஈழ விவகாரம் போனியாகாதென்பது தேர்தல் முடிவுகள் இவர்களுக்கு கொடுத்த பாடமாக இருக்கக்கூடும். பதிவர்கள் கூட பலர் மறந்து விட்டார்கள். விடுதலைப்புலிகள் வெற்றி பெற்று இருந்தால் நாம் தமிழின் பெருமை தமிழனின் வீரம் குறித்து சிலாகித்து கொண்டிருந்திருப்போம். இப்போது அதைப்பற்றி பேச விரும்பவில்லை. உண்மையான ஈழ ஆதரவாளர்களின் நிலைதான் பரிதாபகரமானது. ஈழமக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஏற்கனவே உள்ளூர் தேசியவாதிகளிடம் வாங்கிக் கட்டி கொண்டாகி விட்டது. இப்போது புலம்பெயர்ந்த ஈழமக்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

"ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து"

குறள் விளக்கம்: பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்க கூடியதாக இருப்பின், அக்கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.

.

Tuesday, June 2, 2009

ஹைய்யோ!!!


கொஞ்ச
நாள் முன்னால சுஜாதாவின் ' கணையாழியின் கடைசி பக்கங்கள்' புத்தகத்தை படித்தேன். படிச்ச பிறகு தூக்கமே வரல.. என்னடான்னு பாதி தூக்கத்துல எந்திச்சு பாத்தா என்னென்னவோ தோணுது. சரி அதையே எழுத ஆரம்பிச்சுட்டேன், ஏதோ எழுதுனத வச்சு பிளாக்குல போடலாம்னு பாத்தா மறுநா பிளாக்கையே காணோம்.. கடவுளுக்கே பொறுக்கலனு அத தூக்கி போட்டுட்டேன்.

அத அப்படியே விட்டுட முடியுதா.. அதான் இப்போ புது பிளாக் ஆரம்பிச்சாச்சே..
இந்த பிளாக்குல போட்டுட்டேன்.. திட்டுறவுங்க எல்லாம் சுஜாதாவ திட்டிக்கோங்க...

******************************
++++++++++++++++++++++++


இறக்கைகளிருந்தும்
இயங்கிக்கொண்டிருந்தும்
பறக்க முடியாத மின்விசிறி

**********^^^^^^^^***********

வேலி தாண்டிய நிழல்
வெட்டப்பட்ட கிளை
எங்கள் வீட்டு வேப்பமரம்

**********^^^^^^^^***********

பறக்கும் காகிதம்
உதிராத எழுத்துக்கள்
உன் நினைவுகள்

***********^^^^^^^^**********

புழுதி பறக்கும் சாலை
புறப்பட்டு விட்ட பேருந்து
காத்திருக்கும் கால்கள்

**********^^^^^^^^^**********

..

Saturday, May 30, 2009

32 கேள்வி பதில்கள் - தொடர் பதிவு


இந்த தொடர்பதிவை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் அவர்களுக்கும், தொடர்ந்த பதிவுலக நண்பர்களுக்கும், எனக்கு தொடர வாய்ப்பளித்த நண்பர்கள் லோகு, கண்ணா வுக்கும் நன்றிகள்...

1.
உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
வீட்டுல அப்பா,அம்மா,பாட்டி,அத்தை எல்லாம் கூடிப்பேசி 'செந்தில்கணேஷ்'னு பேர்வைக்கலம்னு முடிவு பண்ணி கோயிலுக்கு போயாச்சு. ஆனா அங்க போயி அய்யர் அர்ச்சனை பண்ணும் போது பேரு என்னனு கேட்க அப்பாவுக்கு பேர் மறந்து போச்சு. கொஞ்சநேரம் யோசிச்சுட்டு கணேஷ்குமார்னு சொல்லிட்டார். அய்யரும் கணேஷ்குமாருங்குற பேருல அர்ச்சனை பண்ணிட்டார். அப்புறம் அதே இருக்கட்டும்னு முடிவு பண்ணிட்டாங்க.

என்னோட பேரு பிடிக்கும் (சுத்தமான தமிழ் பேரு வச்சுருக்கலாம்னு முன்னாடி நினச்சுருக்கேன்)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நினைவில்லை. ( கல்யாணம் பண்ணாததுதான் காரணம்னு நினைக்குறேன்)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு பிடிக்கும், ஆனா மத்தவுங்களுக்கு என் கையெழுத்து பிடிக்கவே பிடிக்காது.

4.பிடித்த மதிய உணவு என்ன?
தமிழ்நாட்டு சமையல் எதுனாலும் சரி தான்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
அதுல நான் கொஞ்சம் ஸ்லோ தான். நட்பு வட்டம் குறைவுதான். நண்பர்களை விரும்புவேன் ஏனோ பெரும்பாலான நட்பை நானாக ஆரம்பித்ததில்லை ...
(நட்பை பெறுவதில் நிதானமாய் இரு, பெற்றபின் உறுதியாய் இரு..- எங்கயோ எப்பவோ படித்தது..)

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவியில் குளிக்குறதுதான் ஆனந்தம்..

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகத்தைதான்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்த விஷயம் : எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி அன்பா இருக்கனும்னு நினைக்குறது
பிடிக்காத விஷயம்: எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி அன்பு காட்ட முடியாதது

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்த/பிடிக்காத விசயம் ரெண்டும் ஒரே விசயம் தான். அது இன்னமும் அவுங்கள அடையாளம் காட்டாம கண்ணாமூச்சி ஆடுறதுதான்

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
முத்து - பள்ளித்தோழன்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கருப்பு பேண்ட், பிஸ்கட் கலர் டீசர்ட் (இந்த கேள்வி இருக்குனு தெரிஞ்சே இந்த டிரஸ்ஸ போட்டேனாக்கும்)

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
தலைக்கு மேல் சுற்றும் மின்விசிறியின் சத்தத்தை கேட்டுக்கிட்டே தட்டுறேன்..
பாக்குறது சிஸ்டம் மானிட்டரத்தான்..( ஐயோ.. அடிக்க வராதிங்க)

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீலம்..

14.பிடித்த மணம்?
செண்பகப்பூ மணம்: கல்லூரி விடுதியிலிருந்து தொடர்ந்து வரும் மணம்
மண் வாசனை: மழை கால பரிசு
பிஸ்கட் வாசனை: சின்ன வயசுத் தேடல்(?)

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

அப்பாவி முரு: உண்மைய உரக்க சொல்லும் இவரது நேர்மையும், தொனியும் எனக்கு பிடிச்சது. அவரப்பத்தி இன்னும் தெரிஞ்சுக்கலாமேனுதான்

வெங்கி ராஜா: இவரோட எழுத்துக்களைப் பாத்தா வியப்பாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கும். அவரப்பத்தி இன்னும் தெரிஞ்சுக்கலாமேனுதான்

ஜெகதீசன்: கல்லுரித் தோழர்.. யதார்த்தமா எழுதுற இவர் நான் பதிவெழுத ஒரு முக்கிய காரணம். இவரை அழைக்க காரணம் இவர் யாரை அழைக்கிறார்னு தெரிஞ்சுக்க தான்..

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
லோகு: அழகிய தமிழ் மகன் இவன் - விஜய் ரசிகனாய் இருந்தாலும் இந்தப் பதிவு என்னை ரசிக்கவே வைத்தது ( கார்க்கி மன்னிக்க ;) )

கண்ணா: உறங்காத விழியில் இறக்காத கனவுகள்

17. பிடித்த விளையாட்டு?
ரம்மி ( ராஜா ராணி ஜாக்கி.. வாழ்வில் என்ன பாக்கி..)

18.கண்ணாடி அணிபவரா?
இல்லை.. சின்ன வயசில கண்ணாடி போடனும்னு ஆசை இருந்தது.. இப்போ டாக்டர் கண்ணாடி போட சொல்லி 3 மாசம் ஆகுது.. இன்னும் போடல.. சீக்கிரமே போடுவேன்..

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
நகைச்சுவையான படம் (அதுக்காக பிளேடு போடக்கூடாது)

20.கடைசியாகப் பார்த்த படம்?
சர்வம்..(தெரியாத்தனமா பாத்துட்டேங்க என்ன பண்றது.. விதி வலியது :(

21.பிடித்த பருவ காலம் எது?
வசந்த காலம்

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா ( பத்து நாளா இந்த புத்தகம் இருக்கு.. இப்போ எல்லாம் முன்ன மாதிரி படிக்க முடியல.. வயசாகுதோ.. கடவுளே..)

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எப்போவாது சிஸ்டத்துல எந்த வேலையும் இல்லாம போரடிச்சா எதாவது இயற்கை காட்சியா கூகிளாண்டவர்கிட்ட தேடி போடுவேன்..

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்: பக்கத்து வீட்டு பாட்டுச்சத்தம்
பிடிக்காத சத்தம்: ஹாரன் சத்தம் தான்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அமீரகம்..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
அததான் பாஸ் நானும் தேடிட்டு இருக்கேன்..(இருந்தாதான கிடைக்குறதுக்கு)

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
மத்தவங்கள மட்டம் தட்டுறத என்னால ஏத்துகவே முடிந்ததில்லை.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
பொய் சொல்லுறதுக்கு கொஞ்சம்கூட கவலைபடாதது...

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
சதுர கிரி - திருவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு பக்கத்துல இருக்கிற ஒரு மலைக்கோவில். நல்ல இடம். இயற்கை காட்சிகளைப் பாத்தாலே மனசெல்லாம் நெறஞ்சுரும். அடிக்கடி போக தூண்டும் இடம்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நாலு பேரு மதிக்கிறாப்புல..

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
அதயெல்லாம் தான் நான் இப்போ பண்ணிட்டு இருக்கேன்..

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நம்பிக்கை..

Wednesday, May 27, 2009

பார்வைகள்..

அந்த பையனுக்கு 13 இல்ல 14 வயசு இருக்கும், எல்லாரோட பார்வையும் அவன் மேலயும் அவுங்க அம்மாமேலயும் தான். அவன் அவுங்க அம்மாவ 'சும்மா இரும்மா.. விடும்மா..எல்லாரும் பாக்குறாங்க..'னு சொல்லிகிட்டே கைய பிடிச்சுகிட்டு இழுத்துகிட்டு இருந்தான். கருப்பா குட்டையா தலையில் போட்ட ஒத்தை கொண்டையோடு ஒடிந்துவிடும் உடல்வாகு அந்த அம்மாவுக்கு. அந்த அம்மாவோ விடுற மாதிரி தெரியல. எப்டி விட முடியும்? அந்த அம்மாவோட புருசன் குடிச்சுட்டு வந்து அந்த அம்மாவ கெட்ட வார்ததைல திட்டிகிட்டு இருந்தான்.

'ஏண்டி..கண்டவன் கூட போய் படுத்து தே***யா தனமா பண்ணிட்டு இருக்க.. அவன வீட்டுல வச்சுகிட்டு கூத்தடிச்சுட்டு இருக்குற.. உன்னையும் அவனையும் கண்டதுண்டமா வெட்டிட்டுதாண்டி மறு வேல...'
அதுக்கு மேல அவன் சொன்னது எல்லாம் இங்க சொல்ல முடியாத வார்த்தைகள்..

கொஞ்ச நேரம் பொறுத்து பொறுத்து பாத்த அந்த அம்மாவால தாங்க முடியாமத்தான் கத்தினாள்.
'ஆமாண்டா அப்படித்தான் அவன் கூட படுப்பேன். உனக்கென்ன? ரெண்டு பச்ச புள்ளைங்கள என்கூட தனியா விட்டுட்டு கூடி கூத்தியானு சுத்திகிட்டு இருந்த! என்னையும் எம்புள்ளைகளையும் அடிச்சது பத்தாதுனு ஊருல இருக்குறவன யெல்லாம் அடிச்சுட்டு ஜெயில்ல வருசம் ஆறுமாசம் குடியிருப்ப.. பிள்ளைகள பட்டினியா போட்டுட்டு நீ வப்பாட்டி வீட்டுல குடியிருப்ப..

இப்போ அவ புருசன பக்கதுல இருந்த ஆளுங்கயெல்லாம் பிடிச்சு போக சொல்லிகிட்டு இருந்தாங்க..
..த்தா என்ன திமிரா பேசுறா பாரு.. புருசங்கிற மரியாத இருக்கா.. உன்னையெல்லாம் ரெண்டா வகுந்து கருவறுக்கணுன்டி...கண்டா****.

'அறுப்படா அறுப்ப.. பொட்டப்பயலே.. கட்டுன பொண்டாட்டிக்கும் புள்ளைக்கும் கஞ்சி ஊத்தாத நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா.. உன் கண்ணு முன்னாடியே அவன்கூட படுப்பேன்டா.. உன்னால என்னடா பண்ண முடியும் பொட்டப் பயலே..'

நல்ல வேளையா அப்போ திருநெல்வேலி பஸ் வந்தது. என்னோட பெரிய பேக்கோட நான் எறினேன். அந்த பையனும் அம்மாவும் ஏறினாங்க. வேற யாரும் ஏறல.. அந்த அம்மா ஜன்னலோரமா சேல தலப்பால வாய பொத்திகிட்டு மௌனமா எங்கியோ பாத்துகிட்டு அழுதுட்டு இருந்துச்சு.

அந்த பையன் தான் டிக்கெட் வங்கினான். 'ரெண்டு திண்னவேலி' வாங்கிட்டு திரும்பும் போது என்னைப்பாத்த பார்வை இருக்குதே..அவமானத்தால் கூனி குறுகி போன அந்த அலட்சியபடுத்த முடியாத பார்வை... ஏண்டா அவுங்கள பாத்தோமுனு என் மேலயே எனக்கு கோவம் வந்துச்சு.

கண்டக்டர் வந்தார்,' எங்க போகணும்?' என்கிட்ட கேட்டார். 'தம்பி, கள்ளிப்பட்டி வந்துருச்சா, வந்தா என்ன மறக்காம எறக்கி விட்டுருப்பா..' இது பக்கத்தில் இருந்த பெரியவர். ' மூட்ட முடிச்செல்லாம் எடுத்து ரெடியா வச்சுக்கோ.. கள்ளிப்பட்டி வரப்போகுது, ஆமா நீங்க எங்க போகணு சார்'

'கள்ளிப்பட்டி ஒண்ணு'

'யோவ் பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க.. கள்ளிப்பட்டி போணுன்னா டவுன் பஸ்ல ஏறவேண்டிதான.. திருநவேலி போற ரூட் பஸ்ல ஏறி உயிர வாங்குறீங்க.. கள்ளிப்பட்டிக்கெல்லாம் டிக்கெட் போட முடியாது..'

'சார் எனக்கு கள்ளிப்பட்டிதான் இறங்கணும்!.. அதான் இந்த தாத்தா எறங்குறார்ல நானும் எறங்கிக்குறேன்'

'நீ கள்ளிப்பட்டி எறங்குனாலுஞ்சரி இங்கயே எறங்குனாலுஞ்சரி விருதுநகர் டிக்கெட்தான் போடுவேன்'

டிக்கெட் வாங்கும் போது அந்த பையன் திரும்பிப்பாத்தான். அவன் முகத்துல சின்ன நிம்மதி..

கள்ளிப்பட்டி பஸ்ஸ்டாண்டுல இருந்த ஒரே ஒரு ஆட்டோக்காரன் வந்து என்னோட பெரிய பேக்க எடுத்துகிட்டு 'யார் வீட்டுக்கு சார் போணும்'

'திருநவேலி போணும்'

ஆட்டோக்காரன் ஒரு தினுசா பாத்துக்கிட்டு 'இங்க திருநவேலி பஸ் நிக்காது சார், வேணுன்னா எதுத்த மாரி நில்லுங்க.. டவுன்பஸ் வரும்.. திருமங்கலம் போய் அங்க இருந்து திருநவேலி பஸ்ஸ பிடிங்க'

திருமங்கலம் டவுன்பஸ்சுக்காக நின்னுகிட்டு இருக்கேன். ரோட்டுக்கு அந்த பக்க டீக்கடெலருந்து அந்த பஸ்ல வந்த பெரியவர் என்ன உத்து பாத்துகிட்டே டீ குடிச்சுகிட்டு இருக்கார். இந்த பார்வையை அலட்சியபடுத்த முடிந்தது..

..

Monday, May 25, 2009

தலைவரும் மீன்வலையும்

இலங்கை போர் நிறுத்ததிற்க்காக ஆறு மணிநேர திடீர் உண்ணாவிரதமிருந்தார் திமுக தலைவர். இன்று ஈழமக்கள் நடுக்கடலில் மாலுமியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைவர் ஏதும் செய்வதாகவும் செய்தியில்லை. என்ன செய்யப்போகிறாரென்றும் தெரியவில்லை. முந்தைய நிகழ்வின் போது தொடர்ந்து தேர்தல் இருந்தது, ஆனால் இப்போது அப்படி ஒன்றும் அவருக்கு நெருக்கடி இல்லை. ஏதும் நெருக்கடி வந்தால் இருக்கவே இருக்கிறார்கள் ஒருவாரமாய் போராடிப் பெறவிருக்கும் மத்திய அமைச்சரவைப் பதவிகள், ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து விட்டு அதைச் சொல்லி சொல்லியே அறிக்கைகளில் தமிழினத்தலைவராகத் தொடரலாம். மத்திய அரசில் முக்கிய பங்கு வகித்த போதே ஒன்றும் செய்ய முடியவில்லை அவரால் (ஆறுமணி நேர உண்ணாவிரத்தினைத் தவிர). இனி அவர் சொன்னாலும் அவையெல்லாம் மத்திய அரசின் காதுகளுக்கு கேட்குமாவெனத் தெரியவில்லை. அது மட்டுமே அவர் மௌனத்திற்க்கு காரணமா? இல்லை ஈழமக்களுக்கு தமிழகத்தமிழர்கள் மத்தியில் ஆதரவில்லையென நினைக்கிறாரா? (ஓட்டு பெறாத விசயத்திற்கெல்லாம் போராட முடியுமா என்ன?)

ஒரு முல்லாக் கதை:

முல்லா ஊரில் நீதிபதிப் பதவி காலியானது. அரசர், ஏழையாய் இருந்து முன்னேறிய, பழசை மறக்காத, நேர்மையான ஒருவருக்குத்தான் நீதிபதி பதவியென அலோசனைக்கூட்டத்தில் முடிவெடுத்தார். அதை எப்படியோ தெரிந்து கொண்ட முல்லா மறுநாள் மீன் வலையோடு அரண்மனை வாசல் வழிச் சென்றார். அதைப் பார்த்த அரசன், முல்லாவை அழைத்து நமது ஊர்தான் கடலிலிருந்து 300 மைல் தொலைவில் இருக்குதே ஏன் மீன் வலையை சுமந்து கொண்டுச் செல்கிறாயெனக் கேட்க, முல்லாவும் அரசே நான் முன்பு மீன்பிடித்துக் கொண்டு கஷ்ட ஜீவனம் வாழ்ந்து வந்தேன். இப்போது வசதி வந்தாலும் தலைக் கனமில்லாமல் இருக்க இப்படி எப்போதும் மீன்வலையை சுமந்து கொண்டிருக்கிறேன்று சொன்னார். அரசரும் மகிழ்ந்து முல்லாவை நீதிபதியாக்கினார்.

சிலநாள் கழித்து அரசர் நீதிமன்றத்திற்கு சென்றார். அங்கு முல்லா மீன் வலையில்லாமல் நீதிபதியாய் அமர்ந்திருந்தார். அரசனும் எங்கே மீன்வலையென்று கேட்க முல்லா சொன்னார், 'மீன்தான் பிடித்தாகிவிட்டதே! மீன்வலையெதற்கு?'

..

Wednesday, May 20, 2009

மழை களவாடிய முத்தம்

என்னுள் தோன்றி
தோன்றி கரைகிறாய் நீ...
நானும் தோற்று
தோற்று உறைகிறேன் உன்னுள்...

மழை பெய்த மாலையில்
நான் கொடுத்த முத்தத்தை
மழை களவாடியதால்
நீ கண்ணீரால் துரத்தி
உன் கண்ணீரும்
என் முத்தமும்
முத்தக்கண்ணீராய்...

தவிக்கும் உதடுகளும்
தடுக்கும் மனதுமாய்
நான் கரம் பற்றி உரசுகையில்
அரவணைக்கும் கண்களும்
அதிர்கின்ற மேனியுமாய்
நீ சிரம் சாய்த்து
பற்றிக் கொள்கிறாய்...

பேசவே வாய்திறந்தேன்
பெருமூச்சாய் விட்டுவிட்டேன்
முத்தமிட உதடு குவித்தாய்
'உச்'சுக்கொட்டி விட்டு விட்டாய்..

அன்று மழையால் கரைந்த பொழுதும்
மழையில் தொலைத்த மனதும்
இன்று உன் குழந்தைக்கு
மழை காட்டும்போது
உறுத்துகிறது நிதர்சனமாய்...

என்னுள் தோன்றி
தோன்றி கரைகிறாய் நீ
நானும் தோற்று
தோற்று உறைகிறேன் உன்னுள்..

..

Tuesday, May 19, 2009

இந்திய ஜனநாயகத்தில் பண நாயகர்களின் பங்கு

தமிழகத்தில் 65 முதல் 68 சதவீதம்வரை வாக்குப்பதிவு நடந்துள்ளது. மக்கள் தீர்ப்பு மே-16 ல் தெரியவரும். அரசியல் விமர்சகர்கள் கருத்துகளின்படி மத்தியில் இழுபறியாகவே முடிவுகள் வரும். தமிழகத்திலும் பாதிக்குப்பாதி எதிர்கட்சி கைக்கு போகுமென தெரிகிறது. அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், இந்த தேர்தலின் போது பணப்பட்டுவாடா அதிகமாகி இருந்தன் காரணம் ஆளுங்கட்சிக்கு திருமங்கலம் கொடுத்த பாடம். திருமங்கலத்தில் கொடுத்த பணமெல்லாம் ஓட்டாய் வந்து குவிந்ததன் விளைவுதான் இந்த தேர்தலிலும் பணத்தை வாரிஇறைத்தார்கள். விஜயகாந்த் திருமங்கல தேர்தலின் போது ஆளுங்கட்சியினர் பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள் ஓட்டை மட்டும் தே.மு.தி.க வுக்கு போடுங்கள் என்று பிரச்சாரம் செய்தார். இந்த தேர்தலில் பணம் வாங்காதீர்கள் அது பாவப்பட்ட பணம் என்று பிரச்சாரம் செய்ய வேண்டி இருந்தது. எங்கள் தொகுதியை பொறுத்தவரை பணப்பட்டுவாடா இருக்காது என்றே நினைத்தேன் வாரிசுகள் நிற்கும் முக்கிய தொகுதிகளில் மட்டும் தான் பணப்பட்டுவாடா இருக்குமென தவறாக நினைத்து விட்டேன். வீட்டில் அம்மாகூட தொலைபேசியில் பேசும் போதுதான் தெரிந்தது, எங்கள் பகுதியிலும் (விருதுநகர் தொகுதி) பணப்பட்டுவாடா நடந்திருக்கிறது ஒரு வோட்டுக்கு 150 ரூபாய் வீதம் கவரில் வைத்து அனைத்து வீட்டுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. சில வீடுகளில் 'பணமெல்லாம் வேண்டாம் நாங்க உங்களுக்குத் தான் ஓட்டளிப்போம்' என சொல்லியும் கேட்காமல் பணக்கவரை வீட்டினுள் வைத்து சென்றிருக்கிறார்கள்.

நான் கவனித்த இன்னொரு விசயம், ஈழ மக்கள் பிரச்சனையில் தி.மு.க மீது அதிருப்தி கொண்ட பழைய வாக்காளர்களும் கலைஞருக்காக தி.மு.க கூட்டணிக்கே ஓட்டளித்து இருப்பதாக கேள்வி.(இது லக்கி லுக் முன்பே சொன்னதுதான்) ஆரம்பத்திலிருந்து தி.மு.க விற்கு வாக்களிப்பவர்களால் சட்டென்று மாற முடியவில்லை. (இது எனக்கு தெரிந்த சிலரிடம் விசாரித்து அறிந்தது தமிழகத்தின் முழுஆய்வு அல்ல) 200 லிருந்து 500 வரை ஒரு வோட்டுக்கு பணமளித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதே போல் எனது நண்பரின் வீட்டிலும்(கரூர்) வேண்டாமென்று சொல்லியும் ஓட்டுக்கு ரூ 200 வீதம் ஆளுங்கட்சியினர் வீட்டில் வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ஜனநாயகத்தை விலை பேசும் இந்த போக்கு கண்டிக்கபட வேண்டியது அவசியம். துரதிஷ்டவசமாக இதை எதிர்க்க தார்மீகரீதியில் எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை. எதிர் கட்சியிலிருப்பவர்களுக்கு தம்மால் அந்த அளவுக்கு பணம் தரமுடியவில்லை என்ற வருத்தம்தான் அதிகமாக இருக்கிறது. (நாளை ஆளும்கட்சியாகி பணவசதி வந்தால் அப்போது இந்த உத்தி உபயோகமாகுமே!)

இனிவரும் தேர்தல்களில் இந்திய ஜனநாயகம் இந்த பணநாயகர்களோடுதான் அதிகம் போராட வேண்டிவரும். இந்த விசயத்தில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லக்கூடிய ஊடகவியலாலர்கள் முக்கியப்பங்கு வகிக்க வேண்டியது அவசியம். பொதுவாக தமிழக பத்திரிக்கையாளர்கள் அத்தனை துணிச்சலானவர்கள் இல்லையென்பது எனது எண்ணம்.(இல்லையென்றால் இலைமறைகாயாக ஆனந்தவிகடனில் எழுத வேண்டிய அவசியமென்ன? இலங்கையில் சண்டே லீடர் ஆசிரியருக்கு இருந்ததைவிடவா ஆனந்தவிகடனின் ஆசிரியருக்கு இந்திய ஜனநாயகத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது- ஒரு சோறு பதம்)

சமூகசீர்திருத்த ஆர்வலர்கள்தான் இந்த விசயத்தில் மக்களிடம் விழிப்புணர்வை எற்ப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அரசியல் வியாபாரிகள் இந்திய ஜனநாயகத்தை சுவிஸ் வங்கி லாக்கரில் பதுக்கிவிடும் அபாயமிருக்கிறது.